துருவ நட்சத்திரம் படத்திற்கு சோதனை மேல் சோதனை... கௌதம் மேனன் உருக்கம்
![துருவ நட்சத்திரம் படத்திற்கு சோதனை மேல் சோதனை... கௌதம் மேனன் உருக்கம்](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/553df26a07da25b121003a1a8aceb6fb.jpg)
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், படம் வெளியாக வில்லை. மேலும், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் உருக்கமான கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பல தடைகளைத் தாண்டி துருவ நட்சத்திரம் படத்தை திரையில் கொண்டு வர படக்குழு போராடி வருவதாக கூறினார். மேலும், படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனாலும், ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.