இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படம்... 'அங்காடித் தெரு' மகேஷ் நடிப்பில் உருவாகும் 'ஏவாள்'!

nagadi-tehru-3

அங்காடித்தெரு படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றவர் மகேஷ். அந்தப் படத்திற்குப் பிறகு அங்காடித் தெரு மகேஷ் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். அந்தப் படத்தை அடுத்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. தற்போது அவர் நல்லதொரு  வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

evaal

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார்.

evaal

மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர்  மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார். இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

evaal

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன். RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த 'ஏவாள்' படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு மது ஜி, மற்றும் எஸ் . எஸ்.பிரபு. திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.

evaal

தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.
அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் 'ஏவாள்'. படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு,குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது .படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன.

இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

Share this story