‘பொன்னியின் செல்வன்’ வெளியாகும் தேதி இதுதான்.. வெளியானது முக்கிய அப்டேட்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக பல பெரிய பிரபலங்கள் முயற்சி செய்து எடுக்க திட்டமிட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. ஆனால் பலர் முயற்சி செய்து எடுக்கமுடியாத இந்த வரலாற்று காவியத்தை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலான இந்த காவியத்தை ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் இருபாகங்களாக மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.

அதில் இருபாகங்களின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது முதல் பாகத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என கடந்த செப்டம்பரில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

