காட்சிகளை இரண்டு முறை படமாக்கும் ‘டாக்சிக்’ படக்குழு...

ஆங்கிலம் மற்றும் கன்னடம் என ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படமாக்கி வருகிறது ‘டாக்சிக்’ படக்குழு.
ஹாலிவுட்டிலும் ‘டாக்சிக்’ படத்தினை வெளியிட, அங்குள்ள முன்னணி ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதனிடையே, படத்தின் ஒவ்வொரு காட்சியினையும் இரண்டு முறை காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஒரு முறை ஆங்கிலத்திலும், இன்னொரு முறை கன்னடத்திலும் படமாக்குகிறார்கள். இதனால் படப்பிடிப்பு செலவும் அதிமாகி இருக்கிறது.
இதற்கு எல்லாம் கவலைப்படாமல் ஹாலிவுட்டிலும் பெரியளவில் வெளியிட இது உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டிற்குள் வெளியிட்டு விட வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.