வரலட்சுமியின் 'கொன்றால் பாவம்' படப்பிடிப்பு நிறைவு...

kondraal paavam

வரலட்சுமி நடிப்பில் உருவாகும் 'கொன்றால் பாவம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 

பிரபல‌ நடிகையான வரலட்சுமி சரத்குமார், தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் வரலட்சுமி, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

கன்னடத்தில் மோகன் ஹப்பு எழுதிய நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘கரால ராத்திரி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. 1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை கன்னடத்தில் தயாள் பத்மநாபன் இயக்கியிருந்தார். தற்போது அவரே தமிழில் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story