வித்தியாசமான முயற்சியில் வென்றதா வாஸ்கோடகாமா...? ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?
இன்று வெளியாகியுள்ள தமிழ் படங்களில் ஒன்று வாஸ்கோடகாமா . தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியதிகார அரசியல், சமூக நிலை ஆகியவற்றை ‘ஸ்பூஃப்’ செய்யும் விதமாக ஒரு ‘உடோபியா’ உலகத்தைச் சித்தரித்து அதைப் பார்வையாளர்களிடம் சோதனை செய்ய முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே.அறம் தொலைத்து வாழும் அயோக்கியர்கள் அதிகமாகவும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களைச் சகித்துக்கொள்ள முடியாத யோக்கியர்கள் குறைவாகவும் வாழும் கற்பனை உலகுதான் கதைக் களம். அதில் நாயகன் வாசுதேவன் (நகுல்) ஒரு யோக்கியன். தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் 4 பேரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுத்த காரணத்துக்காக ‘லாக் அப்’பில் வைக்கப்படுகிறான்.அவனைப் பிணையில் எடுக்க வரும் அவனுடைய அண்ணன் மகாதேவனிடம் “ரோட்ல போற வர பொம்மளைங்ககிட்ட நிம்மதியா செயினைக் கூட அடிக்க விடமாட்டேங்கிறான் சார் உங்க தம்பி.. அப்படியே உங்க அப்பா மாதிரி யோக்கியனா இருக்கிறான்.
வாஸ்கோடகாமாவுக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆள் இவன். இந்தச் சமூகத்துக்கு லாயக்கு இல்லை” என்கிறார்.ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரிலிருந்து மாநகரத்துக்கு வரும் வாசுவுக்கு ‘அயோக்கிய வாசிகள் குடியிருப்பில் ‘இவன் கெட்டவன்’ என்று பரிந்துரை செய்து வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கிறார் அவனுடைய சித்தப்பா முனீஸ்காந்த். வீட்டின் உரிமையாளருடைய மகளோ, வாசுவின் பள்ளிப் பருவத்துத் தோழி. அதை இருவரும் அடையாளம் கண்டுகொண்டு காதலித்து திருமணம் வரை வந்துவிடுகிறார்கள்.ஆனால் திருமண நாளன்று வாசு யோக்கியன் என்பது தெரிந்துபோய், திருமணம் நின்றுவிடுகிறது. இனி வேறு வழியே இல்லாத நிலையில் ‘வாஸ்கோடகாமா’ சிறைக்கு வாசு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த விநோதமான சிறையில் வாசுவின் ‘டாஸ்க்’ என்ன, அதில் அவர் ஜெயித்தாரா என்று செல்கிறது கதை. லாஜிக் இல்லாமல் நகைச்சுவையை மட்டும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு வாஸ்கோடகாமா நிச்சயம் பிடிக்கும்..