பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்...!

தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75.
இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.
நடிகர் ராஜேஷ் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அறியப்படுகிறார். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் அவர் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். கடைசியாக விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவர் நடித்த கடைசிப் படமாக உள்ளது.
திரைத்துறையைத் தாண்டி சமூகவலைதளங்களிலும் ஆரோக்கியம் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவராவார். புத்தக வாசிப்பு சார்ந்தும் பேசுவார். ராஜேஷ் ஒரு பன்முகத் திறமையாளர், சிறந்த மனிதர், நல்லொழுக்கம் நிறைந்தவர் என்று அவருக்கு திரையுலகினர் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.