பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார். அவருக்கு வயது 58.
இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார்.
பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.
புற்றுநோய் பாதிப்பால் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சுப்பிரமணி. இது அவருக்கு 4-ம் கட்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தார்.சமீபத்தில் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார். பிறகு, வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.
மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெற உள்ளது. சூப்பர் குட் சுப்பிரமணி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.