மூத்த இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு: பிரபலங்கள் இரங்கல்!

director

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநராகவும், தாதா சாகேப் பால்கே வென்ற ஜாம்பவான் இயக்குநர் ஷ்யாம் பெனகல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
  பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் (90) நேற்று மும்பையில் உயிரிழந்தார். மும்பை மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் பெனகல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல்.

1934ஆம் ஆண்டில் செகந்திராபாத்தில் உள்ள திருமலகிரி பகுதியில் பிறந்த ஷ்யாம் பெனகல், இளம் வயது முதல் சினிமா ஆர்வம் கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு ’ஆங்கூர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ’மந்தன்’ (1976), ’பூமிகா’ (1977), ’சர்தாரி பேகம்’ (1996) உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1970 மற்றும் 80 காலகட்டங்களில் சுயாதீன இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார். இவர் baharat ek khoj மற்றும் samvidhaan ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார். ஷ்யாம் பெனகல் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு mujib: the making of a nation திரைப்படத்தை இயக்கினார்.

மறைந்த இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. மேலும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளார். இந்திய சினிமாவில் பெரும் ஆளுமையாக திகழ்ந்த ஷ்யாம் பெனகல் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்திய சினிமாவில் தனது கதைகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஷ்யாம் பெனகல் மறைவு, வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கதைகள் எப்போதும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.



அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கதைகளை தனது இயக்கத்தின் மூலம் ஆழமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொன்ன ஷ்யாம் பெனகல் மறைந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.



அதேபோல் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் "நம் காலத்தில் மனிதாபிமான கதைகளை சொல்லும் இயக்குநரை இந்தியா இழந்துவிட்டது. நான் எனது குருவை இழந்துவிட்டேன். ஷ்யாம் பெனகல் தனது லென்ஸ் மூலம் இந்தியாவை தத்ரூபமாக திரையில் கொண்டு வருபவர்.
 மேலும் ஆழமான சமூக கருத்துக்களை மிகவும் சாதாரணமாக கையாள்பவர். ஷ்யாம் பெனகலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் ஷ்யாம் பெனகல் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this story