ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தின் கதைக்களம் என்ன?

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிரதர்’. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள பாடல்களுக்கு இசை விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், படத்தின் டீஸருக்கு இணையத்தில் வரவேற்பு உள்ளது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது.
இதனிடையே வெளிநாட்டில் உள்ள டிக்கெட் விற்பனை இணையதளத்தின் மூலம் படத்தின் கதைக்களம் என்னவென்பது தெரியவந்துள்ளது. அந்த இணையதளத்தில் ‘பிரதர்’ படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு, “கார்த்தியை நினைத்து அவனது பெற்றோருக்கு எப்போதும் கவலை. ஆனால் அவன் சகோதரியின் பார்வையில் அப்படி இல்லை.கார்த்தியால் தனது சகோதரியின் அதீத ஒழுக்கம் கொண்ட, முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வீட்டுக்குள் இருக்க முடியமால் திணறுகிறான். அது அவனது குழப்பமான சூழலுக்கும், அவன் வளர்ந்த விதத்துக்கும் புறம்பாக உள்ளது. கார்த்தியால் அக்காவின் வீடு என்கிற புது சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள முடிந்ததா?” என்று தெரிவித்துள்ளது.