தனுஷின் அடுத்தப்படம் ‘புதுப்பேட்டை 2’ – செல்வராகவன் உறுதி
‘நானோ வருவேன்’ படத்தை முடித்துவிட்டு புதுப்பேட்டை 2 எடுக்கப்போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணி படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். முதன்முதலில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் இந்த கூட்டணி இணைந்தது. முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்தடுத்து இந்த கூட்டணி படங்கள் வரதொடங்கின.
முதல் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்தப் படம் புதுப்பேட்டை. அரசியல் ரௌடியிசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இன்றைக்கும் இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் பெரிய மவுசு உள்ளது.
இந்த வெற்றிப்பிறகு புதுப்பேட்டை 2 படம் எப்போது எடுப்பீர்கள் என செல்வராகனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மௌம் காத்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு திடீரென தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். அதற்கு முன்னர் ‘நானே வருவேன்’ படத்தை தனுஷை வைத்து எடுக்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அசத்தினார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவனிடம், புதுப்பேட்டை 2 படம் எப்போது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, புதுப்பேட்டை 2 உறுதியாக எடுக்க உள்ளேன் என்றும், நானே வருவேன் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால், அதை உருவாக்க சிறிது காலம் தேவைப்படுகிறது. அதனால் நானே வருவேன் படத்தை முடித்தவுடன் புதுப்பேட்டை 2 படத்திற்கான பணிகள் தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.