‘இந்தியன் 2’ ஷூட்டிங் எப்போது ?… புதிய சிக்கலில் மாட்டிக்கொண்ட ஷங்கர்…
‘இந்தியன் 2’ படத்தை தொடங்குவதில் இயக்குனர் ஷங்கருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். 70 சதவீத பணிகள் முடித்தபோது, விபத்து காரணமாக ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதுவரை படம் துவங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த படத்தை தற்போதைக்கு துவங்க முடியாது என்று நினைத்த ஷங்கர், தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளை செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என லைக்கா பிரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷங்கரும், லைக்கா நிறுவனமும் சுமூகமாக பேசி பிரச்சினையை முடித்துக்கொள்ள அறிவுறுத்தியது.
இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் படத்தை ஜூலை முதல் அக்டோபருக்குள் முடித்து தருவதாக ஷங்கர் சொன்னபோது,ஜூலைக்குள் முடித்து தரும்படி படத்தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வி முடிவடைந்தது.
இந்நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலையில் ஷூட்டிங்கை தொடங்குவது என இருதரப்பும் பேசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில்தான் பெரிய சிக்கலே ஷங்கருக்கு ஏற்பட்டுள்ளது. ஷங்கர் தனது மகள் திருமணத்தை ஜூலை மாதம் நடத்த உள்ளாராம். அதேபோன்று ராம்சரண் படத்துக்கான ஷூட்டிங்கையும் அதே மாதத்தில் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதால் என்ன செய்வது தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியுள்ளார்.