“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive
இசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை பற்றி பார்ப்போம்.

1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் இதே தேதியில்தான் பிறந்தார். தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார்.

அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.

மின்சாரக் கண்ணா, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்ம பூசன், இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, பத்மஸ்ரீ விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தமிழக திரைப்பட விருது, மலேசிய விருது, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது என பல சிறப்புமிக்க விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இசையால் உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.