பிரபல இயக்குனர் படத்தில் அருள் நிதியுடன் முதல்முறையாக கூட்டணி அமைக்கும் உதயநிதி!
பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அருள் நிதியுடன் இணைந்து முதல்முறையாக உதயநிதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளரான உள்ள உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அரசியலில் தற்போது இவர்தான் முதன்மை செய்தியாகி வருகிறார்.
அரசியலில் பிசியாக இருக்கும் உதயநிதி, புதிய திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்த உள்ளார். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, இந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வந்ததது. தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை ஹீரோ நடிக்கும் இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து முதல்முறையாக அருள்நிதியும் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.