த்ரிஷாவைத் தொடர்ந்து ஓடிடி பக்கம் திரும்பும் நயன்தாரா!?
கொரோனா அதிகரிப்பு, இறுக்கமான லாக்டவுன் என தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது 2021 ஆண்டு போல தெரியவில்லை. மீண்டும் 2020-ம் ஆண்டிற்குள் நுழைந்த மாதிரி தான் இருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் மீண்டும் திரைத்துறை முடங்கியுள்ளது. வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் படங்கள் ஓடிடி நோக்கி படையெடுத்து வருகின்றன.
த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி‘ என்ற படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ள இந்தப் படத்தை புகழ் சரவணன் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.
த்ரிஷாவைத் தொடர்ந்து நயன்தாராவும் ஓடிடி பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் பிளைண்ட் என்ற கொரிய படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். இது நயன்தாராவின் 65-வது படமாகும்.