முடி திருத்துவோரை அவமதித்த யோகிபாபு மீது புகார்…
முடி திருத்துவோரை அவமதித்து விட்டதாக யோகி பாபு உள்ளிட்டோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நைய்யாண்டியில் உருவாகி மாபெரும் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘மண்டேலா’. யோகிபாபு காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ‘டூலெட்’ படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இவர்களுடன் சங்கிலி முருகன், ஜீ எம் குமார், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை விது அயன்னா கவனித்துள்ளார். கடந்த ஏப்ரல் 4-ம் தேதி விஜய் டிவியில் வெளியாக இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிராமங்களில் நடக்கும் தேர்தலை அரசியலை நைய்யாண்டியுடன் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளது இந்த படம்.
வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் இந்த படத்திற்கு எதிராக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ‘மண்டேலா’ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் வகையில் உள்ளது. எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 40லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் படம் முழுவதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் ஹீரோ யோகிபாபு ஆகியோர் மீது நடவடிக்கை தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.