சமந்தாவின் ‘தி ஃபேமிலி மேன் 2’ படத்திற்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு !
அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிப்போம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலிமேன் 2’ வெப் சீரிஸுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. கடந்த 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான இந்த வெப் சீரிஸை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸில் தமிழர்கள் தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளதாக கூறி சீமான், வைகோ உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று இந்த வெப் சீரிஸை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸுக்கு இயக்குனர் பாரதிராஜாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி ஃபேமிலிமேன் 2’ இணைய தொடரை நிறுத்த தமிழர்களும், தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழ போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால் தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லிம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மனநிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.
‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தவேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால், அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ,தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் என பாரதிராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.